Author: ஜோசப் பால்ராஜ்
•3:59 PM
எனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. எனது 17 வருட தேடல் இது.

மாரநேரி என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நான், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் என்பது அறிமுகமாவதே மூன்றாம் வகுப்பில் தானே. எனக்கு அது வரை ஏ பி சி டி கூட தெரியாது. மூன்றாம் வகுப்பு வந்த போதும் ஏபிசிடி சொல்லச் சொன்னால் 26 எழுத்துக்களையும் சொல்லத்தெரியாது. ஆனால் எழுதச் சொன்னால் அதுவும் எனது சிலேட்டில் எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அது எப்படியென்றால் எனது சிலேட்டின் இரு பக்க சட்டங்களிலும் ஏபிசிடி இருக்கும். அதைப் பார்த்து எழுதி சாமாளித்தேன்.

நான் நான்காம் வகுப்பு படித்த போது எங்கள் ஊர் பள்ளியில் வேலை பார்த்த ஒரு கன்னியாஸ்த்ரி மருத்துவ விடுப்பு எடுத்த போது அந்த விடுப்பு பணிக்காக வந்தவர் தான் சுந்தரி டீச்சர். சுந்தரி டீச்சர் B.Sc வேதியியல் பட்டமும், B.Ed பட்டமும் பெற்றவர்.

நான்கவது படிக்கும் எங்களுக்கு சுந்தரி டீச்சர் வகுப்பெடுக்க வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மதிய நேரம் முதல் பிரிவு அறிவியல் பாடம். எனக்கு ஆங்கிலம் தான் தெரியாதே தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நன்றாகப் படிப்பேன். முதலில் நடந்த அறிவியல் வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து மிக ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி டீச்சரின் பாராட்டுகளையும் பெற்றேன்.

அடுத்த பிரிவுக்கு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கியது. விடுறா ஆளை என்று முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு ஓடிவிட்டேன். சுந்தரி டீச்சர் ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த பாடம் கூட சாலமன் மன்னரின் அறிவை சோதிக்க ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பூக்களை கொடுத்து அதில் எந்த பூ நிஜப்பூ என தொட்டுப்பார்க்காமலேயே கண்டுபிடிக்க சொல்லும் கதை. இந்தப் பாடத்தை நடத்த ஆரம்பித்த டீச்சர், பாடத்திற்கு நடுவே கேள்வி கேட்ட போதுதான் என்னை தேடி, நான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். எங்கடா இந்த பால், அறிவியல் பாடத்துக்கு முன்னாடி உக்காந்திருந்தவன ஆளையே காணோமேன்னு கேட்டாங்க. அதுக்கு என் தோழன் ஒருத்தன் டீச்சர் அவன் எல்லா பாடமும் நல்ல படிப்பான், ஆனா இங்கிலீஷ் அவனுக்கு வராது அதுனால இங்கிலீஷ் பாடத்துக்கு மட்டும் கடைசி வரிசையிலத்தான் உக்காருவான்னு சொன்னான். டீச்சருக்கு கோவம் வந்துருச்சு. முதல்ல நீ முதல் வரிசைக்கு வான்னு கூப்பிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தின் மேல எனக்கு இருந்த பயத்தை போக்கி, எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

டீச்சர் ஊரு நாகப்பட்டினம், அதுனால எங்க ஊர் கன்னியர் மடத்துலயே தங்கி, எங்க பள்ளியில வேலை செஞ்சாங்க. பள்ளியும், மடமும் ஒரே வளாகத்தில்தான் இருந்துச்சு. பள்ளிக்கூடம் விட்ட பின்னர் இரவு உணவு வரையிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் டீச்சர் உடன் தான் இருப்போம். விளையாட்டுகளோடு எங்களுக்கு ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து தான் பல அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல என் அண்ணன் டைட்டஸ், என் வகுப்புத் தோழன் ஒருவன் தோழியர் இருவர் என நாங்கள் 5 பேர் எப்போதும் டீச்சருடனே இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம்.

நாங்கள் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகளத்தூர் என்ற ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் படித்தோம். அப்போதும் எங்கள் ஊரில் டீச்சர் இருக்கும் வரை நாங்கள் அவர்கள் கூடத்தான் இருந்தோம். ஆனால் சில ஆண்டுகளில் டீச்சர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

அவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தது எல்லாம் கீழே உள்ளவை தான்.

1) பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.

2) அவரது தந்தையார் பெயர் காளிமுத்து என்பதும்,அவர் PA to the CEO ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

3) அவரது மூத்த சகோதரியின் கணவர் சோழன் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தார், அவர்களது மகன் பெயர் பிரபு.

4) அவருக்கு ஒரு தங்கை உண்டு.

நாங்கள் அவர்களோடு இருக்கும் போதே எங்களுக்கு அரசியல் குறித்த சரியான பார்வை என்னவாக இருக்க வேண்டும், சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், புதுப் புது கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் எனப் பலவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு கிராமத்தில் பிறந்த எங்கள் முன்னேற்றத்தில் சுந்தரி டீச்சரின் பங்கு மிக முக்கியமானது.

என் அண்ணண் ஜோசப் டைட்டஸ் Neuro Physiology யில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியை முடித்துவிட்டு முனைவர் பட்டம் பெற இருக்கிறார், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் மேடிசன் என்ற ஊரில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலை கழகத்தில் ஆராய்சியாளராக வேலைக்கு சேரும் அளவுக்கு உயர்ந்ததிலும் சுந்தரி டீச்சரின் பங்கு பெருமளவில் இருக்கின்றது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மென்பொருள் துறையில் ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, இன்று வலைப் பதிவு எழுதும் அளவுக்கு என்னை உயர்த்தியதிலும் சுந்தரி டீச்சரின் பங்கு முக்கியமானது.

வலையுலகில் நான் எழுதும் எனது 50வது பதிவு இது. என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் பாசமிகு சுந்தரி டீச்சருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நாகையை சேர்ந்தவரான‌ கோவி.கண்ணண் அண்ணணிடம் நேற்றைய சந்திப்பில் சுந்தரி டீச்சரை குறித்து கூறினேன். அவரது தம்பியிடம் கூறி தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளார். நாகையை சேர்ந்த வேறுயாரும் இந்த பதிவை படித்தீர்களானால் சுந்தரி டீச்சரை நான் கண்டுபிடிக்க உதவுங்கள். 17 வருடமாக தேடிக் கொண்டிருக்கும் எனக்கு யாராவது உதவுங்கள்.

ஐம்பதாவது பதிவை வெளியிடும் இவ் வேளையில் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
This entry was posted on 3:59 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

31 comments:

On Sun Aug 24, 06:14:00 PM SGT , தமிழ் பிரியன் said...

நல்லாருக்கு உங்களின் நன்றியுணர்வு.... :)

 
On Sun Aug 24, 06:32:00 PM SGT , ஜெகதீசன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

சுந்தரி டீச்சரைக் கண்டுபிடிக்கவும் வாழ்த்துக்கள்!

 
On Sun Aug 24, 06:48:00 PM SGT , நிஜமா நல்லவன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

 
On Sun Aug 24, 06:49:00 PM SGT , அருணா said...

50 ....500-ஆக வாழ்த்துக்கள்.உங்கள் சுந்தரி டீச்சர் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.
அம்ன்புடன் அருணா

 
On Sun Aug 24, 07:02:00 PM SGT , விஜய் ஆனந்த் said...

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

சுந்தரி டீச்சரை கண்டுபிடிச்சுட்டு சொல்லுங்க!!!

 
On Sun Aug 24, 07:06:00 PM SGT , Heidi said...

நல்லாயிருக்கு உங்க பதிவு...50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)

நான் கூட எனக்கு 3 வயசில அரிச்சுவடி, alphabets, numerals எல்லாம் அம்மா மாதிரி அன்போட சொல்லிகொடுத்த என் உமா மிஸ் ஐ ரொம்ப வருஷமா தேடிட்டு இருக்கேன்... :-(

 
On Sun Aug 24, 07:08:00 PM SGT , துளசி கோபால் said...

முதலில் அரைச் சதம் போட்டதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

டீச்சரைக் கட்டாயம் கண்டுபிடிச்சிரலாம். எங்க எல்லோருடைய ஆர்வமும் அன்பும் துணை இருக்கும்.

 
On Sun Aug 24, 07:09:00 PM SGT , Mahesh said...

வாழ்த்துக்கள் ஜோசப். சீக்கிரமே செஞ்சுரி அடிங்க ...

இந்த பதிவு மூலமா உங்க சுந்தரி டீச்சர மறுபடியும் சீக்கிரமே சந்திக்க கடவது !!!

 
On Sun Aug 24, 07:09:00 PM SGT , Mahesh said...

வாழ்த்துக்கள் ஜோசப். சீக்கிரமே செஞ்சுரி அடிங்க ...

இந்த பதிவு மூலமா உங்க சுந்தரி டீச்சர மறுபடியும் சீக்கிரமே சந்திக்க கடவது !!!

 
On Sun Aug 24, 08:10:00 PM SGT , மஞ்சூர் ராசா said...

உங்களின் ஐம்பதாவது பதிவில் தான் எனது இந்த முதல் பின்னூட்டம்.

உங்களை பயிற்றுவித்து இன்று நீங்கள் நல்ல நிலையில் இருப்பதை நிச்சயம் உங்கள் சுந்தரி டீச்சர் கண்டு மகிழ்வார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

 
On Sun Aug 24, 08:14:00 PM SGT , VIKNESHWARAN said...

வழ்த்துக்கள் அண்ணே.. 50வது பதிவா? மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பயனுள்ள தகவல்களை எழுதுங்கள். உங்கள் ஆசிரியரை கூடிய விரைவில் சந்திக்க இறைமை வழி புரியட்டும்.

 
On Sun Aug 24, 08:23:00 PM SGT , கையேடு said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பால்.. :)

பதிவின் மூலமான உங்கள் உணர்வுப் பூர்வமான தேடல் விரைவில் நிரைவேற வாழ்த்துக்கள்.

 
On Sun Aug 24, 08:32:00 PM SGT , Thooya said...

சீக்கிரம் உங்கள் ஆசிரியை நீங்கள் சந்திக்க வாழ்த்துகள்..

50 பதிவுக்கு பெரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ வாழ்த்து ஜோண்ணா :)

 
On Sun Aug 24, 09:18:00 PM SGT , ச்சின்னப் பையன் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

உங்கள் ஆசிரியரை நீங்கள் தேடும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

 
On Sun Aug 24, 09:54:00 PM SGT , SanJai said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜோசப். உங்கள் சுந்தரி டீச்சரை விரைவில் சந்திப்பீர்கள்... என் ஆரம்ப பள்ளி ஆசிரையை இப்போதும் நான் சந்திக்கும் தூரத்தில் தான் இருக்கிறார்கள். கல்லூரி படிப்பு முடித்த பின் கூட பல முறை அவர்கள் இல்லம் சென்று சந்தித்திருக்கிறேன்..

( அவர்கள் மகன் சிறு வயதில் எங்களுடன் விளையாடுவதற்காகவே டீச்சருடன் வந்துவிடுவான். பிறகு மேல் நிலைக் கல்வி கற்க நான் சேர்ந்த பளியில் தான் அவனும் படித்துக் கொண்டிருந்தான். இப்போது அண்ணா பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்துவிட்டான். இப்போதும் எங்கள் நட்பு தொடர்கிறது.. அவனை பார்ப்பதற்காகவும் எங்கள் அன்பு டீச்சரை பார்ப்பதற்காகவும் செல்வதுண்டு..)

நினைவை மீட்டெடுத்ததற்கு நன்றி ஜோசப். :)

 
On Sun Aug 24, 10:10:00 PM SGT , சதீசு குமார் said...

உங்கள் தேடல் முயற்சி விரைவில் பலனளிக்க இறைவனை வேண்டுகிறேன்..

 
On Sun Aug 24, 11:09:00 PM SGT , kadayam ananth said...

உங்கள் ஆசிரியரை நீங்கள் தேடும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

 
On Mon Aug 25, 09:55:00 AM SGT , கோவி.கண்ணன் said...

//1) பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.//

பால்ராஜ்,
எங்க வீட்டுக்கு நெருக்கமான பகுதிதான். நானும் ஊரைவிட்டு வேலைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கிறது,ஊரிலேயே இருக்கும் எனது அண்ணன் தம்பியிடம் தகவல் சொல்லி விசாரிக்கச் சொல்கிறேன்.

 
On Mon Aug 25, 09:56:00 AM SGT , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே! முதலில் உங்க 50 ஆவது பதிவிற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். உங்களைப் போலவே நானும் என்னுடைய பேராசிரியர்.திரு.வி.செல்வராஜ் அவர்களைத் 9 வருடங்களாகத் தேடிக் கொண்டு இருக்கிறேன். நம் இருவரின் தேடலும் விரைவில் நிறைவேற இறைவன் உதவட்டும்.

 
On Mon Aug 25, 11:52:00 AM SGT , Ramya Ramani said...

அருமை ஜோசப் இப்படி ஒரு வழிகாட்டி எல்லோருக்கும் அமைய வேண்டுமே!!

50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

 
On Mon Aug 25, 12:57:00 PM SGT , jackiesekar said...

ஜோ நம் வளர்ச்சியில் எத்தனையோ பேருக்கு பங்கு உண்டு இருப்பினும் தன் கற்றதை எல்லாம் தன் பிள்ளைகளை விட மேலாக நினைத்து நம் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே... தங்கள் நன்றி உணர்ச்சிக்கு நன்றி

 
On Mon Aug 25, 02:03:00 PM SGT , கயல்விழி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

 
On Mon Aug 25, 02:40:00 PM SGT , ஜோசப் பால்ராஜ் said...

என் பேரன்புக்குறிய லதானந் மாமா அவர்கள் வலையுரையாடலில் எனக்கு அளித்த பின்னூட்டம். இதை பின்னூட்டமாக வெளியிடுமாறு கூறியுள்ளார்.


lathananth: உங்கள்து 50 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். நன்கு எழுத வருகிறது உங்களுக்கு. மென் மேலும் எழுதுங்கள். டீச்சரை சீக்கிரம் சந்தித்து மேலும் நிறைய உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் எனது வாழ்த்துக்கள்.
நான் கோவையில் உள்ள செயின்ட் மேரீஸ் கான்வென்டில் நாலாம் வகுப்பு வரை படித்தேன். )இப்போது முழுக்க முழுக்கப் பெண்கள் பள்ளியாகிவிட்டது அது)
அப்போது எனக்கு நாலாம் வகுப்பில் க்ளாஸ் எடுத்த வெரோனிக்கா மிஸ் நல்லா நியாபகம் இருக்கு. அவிங்க கிட்ட வ்ந்தாக்கவே நெம்ப வாசனையா இருக்கும். சுருட்டை முடி. கண்ணு ரெண்டும் பெருசு. ஒதடும் நெம்பப் பெருசு. மூஞ்சில பரு நெறைய இருக்கும். தலைல ஒத்தை ரொச்சப்பூ எப்பூமே வெச்சிருப்பாங்க. ஒரு நா அது கீழ உழுந்திருச்சு. ஏழெட்டு வருசம் அதைப் பத்திரமா வெச்சிருந்தேன். "விளையும் பயிர் முளையிலே"னு சும்மா வா சொன்னாங்க ஹிஹி

 
On Mon Aug 25, 07:20:00 PM SGT , ஜோசப் பால்ராஜ் said...

எனது 50வது பதிவுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

எனது மதிப்பிற்குறிய ஆசிரியையை நான் விரைவில் சந்திக்க என்னை வாழ்த்தியவர்களுக்கும் எனது நன்றிகள்.

கோவி.கண்ணண் அண்ணண் மற்றும் பல நண்பர்கள் நாகையில் விசாரித்து சொல்வதாக கூறியுள்ளார்கள். அவர்கள் உதவியுடன் விரைவில் என் டீச்சரை சந்திப்பேன் என்று முழுமையாக நம்புகிறேன். மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.

 
On Tue Oct 07, 12:35:00 AM SGT , ஜோ / Joe said...

50-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும்.

 
On Tue Oct 07, 05:03:00 AM SGT , தமிழன்... said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

 
On Tue Oct 07, 05:04:00 AM SGT , தமிழன்... said...

விரைவில் உங்கள் ஆசரியையை கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்....

 
On Tue Oct 07, 07:11:00 AM SGT , நசரேயன் said...

உங்களது ஐம்பதாவது பதிவுக்கும் தொடர்ந்து எழுதுவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 
On Wed Oct 08, 08:32:00 AM SGT , Anonymous said...

எனக்கும்,6ம் வகுப்பிலிருந்து கரிசனையுடன் படிப்பித்த சந்திரா ரீச்சர்,இராசையா (செல்லய்யாவோ...?கொஞ்சம் மறந்து விட்டது)ரீச்சர்ர ஞாபகப்படுத்தி விட்டது.அவர்கள் எதிர்பார்த்தபடி, ...உங்களைப் போல உருப் பெறவில்லை.ஆனாலும், அவர்கள் எங்களுக்கு பிடித்தமான இளம் அம்மாக்கள்.அவர்கள் கல்யாணம் கட்டாத இளம் வயதில் இருந்தார்கள்.சந்திரா ரீச்சர், "தேவ சேவை செய்ய கன்னியாஸ்திரியாக போகப் போறேன்"என்பார்.இராசைய்யா ரீச்சர் அப்படி ஒன்றும் சொல்வதில்லை.அவர்கள் என்ன நினைத்து அன்பு செலுத்தி இருப்பார்கள்?... 'தங்களுக்கு மகன் பிறந்தால் எங்களைப் போல இருபார்கள்'என்று நினைத்திருக்கலாம்.அழியாத கோல நினைப்புகள் எல்லாம் ஏற்பட தொடங்கியது உயர் வகுப்பில்லான காலத்தில் தான்.அதற்கு முதல் எந்த கறையும் அன்பில் இருக்கவில்லை.

 
On Thu Oct 09, 10:53:00 PM SGT , Anonymous said...

நல்ல பதிவு. சுவாரசியமா இருக்கு. எனக்கும் அப்படியே கொசுவத்தி சுத்தி டீச்சர்சை ஞாபகபடுத்திட்டீங்க!! :-)

டீச்சரைக் கண்டுபிடிச்சீங்களா?

-mullai

 
On Wed Jan 28, 12:43:00 AM SGT , வால்பையன் said...

அண்ணே கோவி ஜி கண்டுபிடிச்ச அன்னைக்கு இந்த பதிவ எனக்கு படிக்க கொடுத்ததுக்கு நன்றி!

உங்களின் நன்றியணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது!

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க